இறையாண்மை மிக்க இலங்கையென
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாந்து கிடப்பாய் தமிழா
துயிலும் இல்லங்களும்
உழுது அழிக்கப்படுகிறது இங்கே
ஊசி முனை நிலத்திற்கும்
உரிமை இல்லாதவன் தமிழன்
ஆறடி நிலத்தினை
ஆட்சி கொள்வதோ என
நூலகப் பொதிகையாய்
அடுக்கப் பட்ட எங்கள்
ஆத்ம ஜோதிகளை
துயிலும் இல்ல பெட்டகங்களை உடைத்து
அழிக்கின்றான் பேரினவாதச் சிங்களவன்
கண்களை விற்று காட்சி வாங்குவதோ
கல்லறை என்று சொல்லி
எங்கள் கண்மணிகளை நாம் இழப்பதோ
தாயகக் கனவொன்றே இவர்கள் தாகம்
தன்மான உயர்வொன்றேதான்
இவரின் உயரிய வேதம்
இறந்தவர் என்றால்
கல்லறை என்போம்
விதைக்கப் பட்டவர்கள் இவர்கள்
விழி மூடி துயில்கின்றனர்
தூயவர்கள் துயில்கொள்ள
ஓர் இல்லமும் இல்லை யென
கொல்லும் மனிதாபமும் இல்லாதோரிடம்
இன்னும் மண்டி இட்டு கிடப்பதோ தமிழா
எழடா எழடா எம் உறவே
எரிமலைதான் நீயும் எழு கனலே
அடிமை என்பவர் இனியும் இல்லை
அடிபணி வாழ்வே உலகில் துயர்.
02.
தாயகத் தாகம்
---------------------
விழியில் இருந்து குருதி வழிந்து
விடியல் தொலைத்த உறவே
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று எரிக்கும்
பொல்லாங்கு உலகை வெறுத்துவிடு
இல்லாதோர் இவரென்றே
நலிந்தோரை வதை செய்து
நலன் கெட புழுதியில் வீசிவிட்டு
ஜனநாயக நிலையாளர்
இலங்கை அரசென்றே
பொன் முடி சூடி கொடுக்கிறது
இராணுவ வதைகளின் கெடுபிடி அதனுள்
நாம் உதிரம் சொரிவதை இகழ்ந்தாரே
காமுகர் வதைகளில் கற்பினை இழந்து
மடிந்திடும் மலர்களை மறந்தாரே
முடமாய் யடமாய் முள் கம்பி சிறைக்குள்
உழலும் வாழ்வையும் உளம் கனிந்தே
உயர் காப்பு வளையமென்றே உரைத்தாரே
புத்தன் பிறந்தான் பூமியில் ஓர் நாள்
அது அன்பின் அடையாளம்
எம் பூமியில் புத்தன்
புதிதாய் முளைப்பதெல்லாம்
சிங்கள எத்தரின் வெறியாட்டம்
அமைதிப் பேச்சு அகிலம் நகைக்க
ஆயிரம் பொய்யாச்சு
அகதி வாழ்வு நியதி அல்லவே தமிழா
அடிமை கூண்டை உடைத்துவிடு
உயிரினும் மேலாம் உன் தேசம் உயர்ந்திட
உன் உயிரை திருப்பிக் கொடுத்துவிடு
வேட்டொலி கிடந்த யாழிசை நரம்பில்
பாட்டொலி பிறக்கலையா
எம்மை வாட்டிய கோட்டையில்
புலிக்கொடி பறந்து பட்டொலி வீசலையா
ஆனை இறகிலே ஆற்றிய போரினில்
ஆயிரம் தலை பறித்தோம்
ஆளும் அரசுக்கே சன்மான பேளையில்
அனைத்தும் கொடுத்து வைத்தோம்
கோட்டை கோட்டையாய் இனி நாம் பிடிப்போம்
எங்கள் கோணமாமலையிலும் கொடி வைப்போம்
விண்ணையும் மண்ணையும் கடலையும் ஆண்ட
நிலவே நீயும் வந்துவிடு
சத்திய சோதனை எதுவானாலும்
வெல்வோம் வெல்வோம் தமிழீழம்
அன்றே தணியும் எங்கள் தாயகத் தாகம்.